India

தற்கொலை செய்து கொண்ட கணவன்.. வெளியே சொல்லாமல் உடலை வீட்டிற்குள் புதைத்த மனைவி: சிக்கியது எப்படி?

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூர் பரேலி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்த் சிங் . இவர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காணாமல்போன கோவிந்த் சிங்கின் படுக்கையறையில் இருந்து சில நாட்களாகத் துர்நாற்றம் அடித்துள்ளது.

இதனால் அவரது சகோதரர்கள் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் படுக்கையறையை தோண்டி பார்த்துள்ளனர். அப்போது அழுகிய நிலையில் கோவிந்த் சிங் உடல் இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் இது குறித்து அவரது மனைவியிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆகஸ்ட் 7ம் தேதி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கடும் மனவேதனையடைந்த கோவிந்த் சிங் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த அவரது மனைவி இதை வெளியே சொன்னால் உறவினர்கள் தம்மைத் தவறாக நினைப்பார்கள் என பயந்து அவரது உடலைப் படுக்கையறையிலேயே புதைத்தது விசாரணையில் வெளிவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 4 ஆண்டுகள் பெண் தேடியும் திருமணம் நடக்காததால் விரக்தி.. வாலிபர் எடுத்த விபரீத முடிவு!