India

மருமகளின் தலையை கையோடு காவல் நிலையத்திற்கு சென்ற மாமியார்.. அதிர்ந்துபோன போலிஸார் !

ஆந்திரப் பிரதேச மாநிலம் அன்னமய்யா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பம்மா. இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வசுந்தரா (வயது 35) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். தற்போது வசுந்தரவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், அவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார்.

இதையடுத்து தனது மாமியார் மற்றும் மைத்துனனுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் வசுந்தரா, ஒருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கணவர் இறப்பதற்கு முன்பு, அவரது சொத்தை வசுந்தரா பெயருக்கு எழுதி வைத்துள்ளார். மேலும் வசுந்தரா மற்றும் சுப்பம்மாவுக்கு இடையே அடிக்கடி தகராறும் வந்துள்ளது.

இந்த நிலையில், அந்த சண்டை மகன் எழுதி வைத்த சொத்து விவகாரத்திலும் வந்துள்ளது. அதோடு இந்த சொத்தை தனது காதலுனுக்கு எழுதி வைக்க வசுந்தரா முடிவு செய்ததாக மாமியார் சுப்பம்மாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே தனது மருமகளை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, தனது இளைய மகனுடன் திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று மாலை மருமகள் வசுந்தரவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மாமியார் சுப்பம்மா. இந்த வாக்குவாதம் இருவருக்குள்ளும் முற்றிப்போக, தனக்கு நேர்ந்த அவமானத்தினால் ஆத்திரமடைந்த மாமியார், தனது மருமகள் தலையை வீட்டில் இருந்த அரிவாளை கொண்டு வெட்டியுள்ளார்.

இந்த தாக்குதலில் துண்டான மருமகள் தலையை எடுத்துக்கொண்டு அப்பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார் சுப்பம்மா. சுப்பம்மா தலையுடன் இரத்த கோலத்தில் காவல்நிலையத்திற்கு வந்தபோது, அதை கண்டு அதிர்ந்த அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அதோடு இறந்துபோன வசுந்தராவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், அதனை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு, இது இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னையில் மருமகள் தலையை வெட்டி, காவல்நிலையத்தில் சரணடைந்துள்ள மாமியாரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உ.பி-யில் பெண்ணை தாக்கிய விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி அதிரடி !