India

'போதையில் பாலியல் தொல்லை..' acid-ல் மிளகாய்ப்பொடி கலந்து கணவர் மேல் ஊற்றிய மனைவி.. - உ.பி.யில் பயங்கரம் !

உத்தர பிரதேச மாநிலம் பரெய்லி பகுதியில் வசித்து வருபவர் முகமது யாசின். இவருக்கு திருமணமாகி ஃபர்ஹா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மது பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் வீட்டிற்கு மது அருந்திவிட்டு தனது மனைவியை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.

இந்த நிலையில், சம்பவத்தன்று யாசின் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி மற்றும் குழந்தையை தாக்கியுள்ளார். மேலும் மனைவிக்கு பாலியல் ரீதியாக தொல்லைகொடுத்துள்ளார். அவர் மறுத்தபோது மீண்டும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி, யாசின் தூங்கிக்கொண்டிருந்தபோது, கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டில், மிளகாய் பொடியை கலந்து அவர் மீது ஊற்றியுள்ளார். பிறகு அந்த இடத்தில் இருந்து தனது மகளை அழைத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதனிடையே ஆசிட் ஊற்றியதால் யாசின் அலறி துடித்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரது வீட்டிற்கு வந்து அவரை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு புகாரும் தெரிவித்தனர். மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர்கள், அவரது உடல் 40% வெந்துள்ளதாகவும், தற்போது அவரது உயிருக்கு எந்த வித ஆபத்து இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து யாசினின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் யாசின் மனைவி மீது IPC 326-ன் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பிசென்ற அவரது மனைவி ஃபர்ஹாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், யாசினின் சிகிச்சை முடிந்த பிறகு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சமந்தா பட பாணியில் காரை அந்தரத்தில் நிறுத்திய பெண் ஓட்டுநர்.. பதைபதைக்க வைக்கும் நிகழ்வு !