India

கஞ்சா குற்றவாளிகளை பிடிக்க அதிவேகமாக சென்ற போலிஸ் வாகனம்: பாலத்தில் மோதி 3 போலிஸார் பலி - மூவர் படுகாயம்!

கர்நாடக மாநிலம் முழுவதும் கஞ்சா கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பல இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் அவலமும் அரங்கேறியுள்ளது.

கஞ்சா விற்பனையை தடுக்கவும், கடத்தல் சம்பவங்களை பிடிக்கவும் அம்மாநில காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. மேலும் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் பலத்த போலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கஞ்சா குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற போலிஸார் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் சிவாஜி நகர் சேர்ந்த போலிஸார் கஞ்சா வழக்கில் குற்றவாளியை பிடிப்பதற்காக ஆந்திர மாநிலம் சித்தூருக்கு நேற்றிரவு சென்றனர்.

நள்ளிரவில் சித்தூரில் தேடிவிட்டு சம்பந்தபட்ட குற்றவாளி திருப்பதியில் இருக்கலாம் என்ற கோணத்தில் சித்தூரில் இருந்து திருப்பதிக்கு காரில் புறப்பட்டு சென்றனர். அப்போது சித்தூர் திருப்பதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதிவேகம் காரணமாக சாலையோர பாலத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போலிஸார் மற்றும் கார் ஓட்டுனர் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலியுள்ளனர்.

மேலும் மூவர் பலத்தக் காயங்கள் அடைந்துள்ளனர். பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த மூன்று பேரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனிடையே இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 2 வருடங்களாக வீட்டில் இறந்து கிடந்த பெண்.. வாடகைதாரர் வாடகை வசூலித்த அவலம் !