India

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி.. வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்.. உ.பி.யில் பயங்கரம் !

டெல்லியிலுள்ள நாங்கோலாய் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெய் பிரகாஷ். இவர் அந்த பகுதியில் காலணி தொழில்சாலை ஒன்று நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 15 வயதுடைய சிறுமி ஒருவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 2-ம் தேதி, தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் ஜெய் பிரகாஷ். அங்கே அந்த சிறுமியை மிரட்டி பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் கடந்த ஜூலை 5-ம் தேதி அந்த சிறுமி சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்து, அவரது வாயில் வலுக்கட்டயமாக ஆசிட் போன்ற ஒரு திரவத்தை ஊற்றியுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த அந்த சிறுமி மயக்கமடைந்துள்ளார். சுயநினைவை இழந்து கிடந்த சிறுமியை அவரது பெற்றோர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை டெல்லி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சிறுமி பேச முடியாத நிலையில் இருந்ததால் அவரிடம் வாக்குமூலம் வாங்குவதற்கு தாமதம் ஆனது.

இந்த நிலையில், நேற்று சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற காவல் அதிகாரிகள், இந்த சம்பவத்தில் ஜெய் பிரகாஷின் மனைவிக்கும் பங்கு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டம், கொலை செய்யும் முயற்சி சட்டப்பிரிவு 307, 376, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அவரது வாயில் ஆசிட்டை ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வன்முறையை கைவிடுங்கள்.. போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு!