India

“ஓடும் பேருந்தில் பிறந்த ஆண் குழந்தை.. பம்பர் ஆஃபர் கொடுத்த தெலங்கானா அரசு” : நெகிழ்ச்சி சம்பவம்!

தெலங்கானா மாநிலத்திலுள்ள அடிலாபாத் என்ற பகுதி அருகே நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், தனது உறவினர்களுடன் ஒரு கிராமத்திற்கு செல்வதற்கு அரசு பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்.

அப்போது திடீரென்று பிரசவ வலி ஏற்பட அருகிலிருந்த சக பெண் பயணிகள் மற்றும் அவரது உறவினர்கள் பிரசவத்தை பார்த்துள்ளனர். பிரசவத்தின்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டுள்ளனர். எனினும் அவை எதுவும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்பதால், பேருந்தின் மூலமாக அருகிலிருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார மையத்தில் தாயை அனுமதித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த அடிலாபாத் போக்குவரத்து கழக மேலாளர் விஜய், அதிகாரிகளுடன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டுமின்றி அரசு பேருந்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யக்கூடிய பாஸையும் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக போக்குவரத்து மேலாளர் விஜய் கூறுகையில், “இந்தப் பேருந்தை இயக்கியை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவருக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவிக்கிறேன். தற்போது தாயும் சேயும் நலமுடன் இருக்கின்றனர். மக்களுக்கு எப்போதும் ஆதரவாகவும், நண்பர்களாகவும் போக்குவரத்துறை ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதற்கு இந்தச் சம்பவம் ஒரு முக்கியமான சான்று” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே போல் அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பேருந்தில் பிரசவம் பார்த்து இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த குழந்தைகளுக்கும் வாழ்நாள் முழுக்க இலவசமாக பயணிக்க தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இரகசிய காதலர்களுக்கிடையே தகராறு.. பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தூக்கி வீசிய அவலம்..