India

கையால் தள்ளியதும் இடிந்த சுவர்.. அரசு பொறியியல் கல்லூரி கட்டுவதில் ஊழல்: பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அவலம்!

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆகியுள்ளார். அதற்கு முன்பிருந்த இவரது 5 ஆண்டு கால ஆட்சியில், உத்தர பிரதேசத்தில் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகமாக காணப்பட்டது. எனவே இந்த முறை இவர் ஆட்சியை பிடிக்கமாட்டார் என எண்ணிய நிலையில் மீண்டும் இவர் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

சரி இனியாவது உ.பி. மாநிலத்தில் குற்றங்கள் குறைந்து வரும் என மக்கள் நம்பியிருக்கையில் மீண்டும் குற்றங்கள் அதிகரித்து வருவதோடு ஊழல்களும் பெருகியுள்ளது. அதன்படி உத்தரபிரதேசத்தில் உள்ள ராணிகஞ்ச் தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

RK Verma, Samajwadi MLA

இந்த கல்லூரியில் சமாஜ் வாடி கட்சியை சேர்ந்த அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான டாக்டர் ஆர்.கே.வர்மா, ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டப்பட்டு வரும் சுவற்றில் ஒன்றை தனது ஒற்றை கைகளால் தள்ளும்பொழுது, சுவர் இடிந்து கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மற்றொரு சுவரையும் கீழே தள்ளினார். அதுவும் கீழே விழுந்தது.

இது தொடர்பான வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு "இளைஞர்களின் எதிர்காலம் இது போன்ற தரக்குறைவான கட்டுமானப் பணிகளால் தயாராகவில்லை, இது அவர்களின் மரணத்திற்கான ஏற்பாடு, ராணிகஞ்ச் சட்டமன்றத்தில் கட்டப்பட்டு வரும் பொறியியல் கல்லூரியில் இவ்வளவு ஊழல்" என்று பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து சமாஜ் வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்து, "பா.ஜ., ஆட்சியில், மிகப்பெரிய ஊழல் என்ற அதிசயம் தனித்துவமானது" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த கல்லூரியை கட்ட சுமார் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதே போல பல அரசு கல்லூரிகளில் நிலையும் இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இது பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்பதால் இது தொடர்பாக பா.ஜ.க. அமைச்சர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Also Read: ‘அம்மா சத்தியமா இதுதான் உண்மை..” : ‘வாரிசு’ பட போஸ்டர் சர்ச்சையில் உண்மையை போட்டுடைத்த OTTO நிறுவனம்!