India
அமைதியான நாடுகளின் பட்டியல் வெளியீடு : பின்னடைவை சந்தித்த அமெரிக்கா - இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா?
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சிந்தனைக் குழு ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் எப்போதும் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த ஆண்டும் அதே ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
இந்த பட்டியலில் கடந்த 13 ஆண்டுகள் முதலிடத்தில் நீடித்து வந்த ஐஸ்லாந்து 14வது ஆண்டாக இந்தாண்டும் முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து 2வது இடத்தில் தொடர, அயர்லாந்து 3ம் இடத்திலும், டென்மார்க் 4வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 7ம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா இந்தாண்டு 5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
6வது இடத்தில் போர்ச்சுக்கல், 7வது இடத்தில் ஸ்லோவேனியா, 8வது இடத்தில் செக் குடியரசு, 9வது இடத்தில் சிங்கப்பூர், 10வது இடத்தை ஜப்பானும் பிடித்துள்ளன. இந்த பட்டியலின் முதல் 10 இடத்தில் ஐரோப்பாவை சேர்ந்த 6 நாடுகளும், இரண்டு ஆசிய நாடுகளும், இரண்டு ஒசியானிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் வழக்கம் போல ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் பின்னடைவையே சந்தித்துள்ளன.
2008ம் ஆண்டு எற்பட்ட பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு உள்நாட்டில் எற்பட்டுள்ள அமைதியின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்த பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறது. இந்த பட்டியலில் இந்தாண்டும் அமெரிக்கா 129வது இடத்தையே பிடித்துள்ளது. அதே நேரம் பின்னடைவை சந்தித்து வந்த இங்கிலாந்து, இந்தாண்டு இரண்டு இடங்கள் முன்னேறி 34வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா இந்தாண்டு 3 இடங்கள் முன்னேறி 135வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல தெற்காசிய நாடுகளான நேபாள் 73வது இடத்திலும், இலங்கை 90வது இடத்திலும், வங்காளதேசம் 96வது இடத்திலும் உள்ள நிலையில், இந்த பட்டியலில் பாகிஸ்தான் நம்மை விட பின் தங்கி 147வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் மொத்தமுள்ள 163 நாடுகளில், 84 நாடுகளின் அமைதி அதிகமாக சீர்குலைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல 77 நாடுகளில் அமைதி முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Also Read
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!
-
தமிழ்நாட்டுக்கு வந்த பீகார் கல்வித்துறை அதிகாரிகள் : தமிழக கல்வி முறையை பீகாரில் அமல்படுத்த திட்டம் !
-
“பிரதமர் மோடியின் பேச்சு தரங்கெட்டு இருக்கிறது” - வைகோ கடும் விமர்சனம் !