India

சாலை விபத்தில் காதலன் உயிரிழப்பு.. “என்னையும் அவனோடு புதைத்திடுங்க” : காதலி எடுத்த விபரீத முடிவு!

கர்நாடகா மாநிலம் ஆரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ். இதே பகுதியைச் சேர்ந்தர் சுஷ்மா. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதால் காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், பஸ்கல் கிராமத்தில் நடந்த ஊர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகப் பெங்களூருவிலிருந்து கார் மூலம் தனுஷ் வந்துள்ளார். பின்னர் நிலமங்கள அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் தனுஷ் வந்த கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனுஷின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில், காதலன் சாலை விபத்தில் உயிரிழந்ததால் காதலி சுஷ்மா சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று வீட்டில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து அவரது வீட்டிற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தற்கொலைக்கு முன்பு சுஷ்மா எழுதிய கடிதத்தையும் போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில், தனுஷ் இறந்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னையும் அவன் உடல் அருகே புதைத்து விடுங்கள் என எழுதியிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சுஷ்மாவின் உறவினர்கள் அவரின் விருப்பப்படி காதலன் தனுஷ் அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே அவரது உடலையும் அடக்கம் செய்துள்ளனர். காதலன் இறந்ததால் காதலியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தாலி கட்டிய கையோடு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மணமகன்: திருவாரூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!