India

“ஆட்டம் இன்னும் முடியல..” : பா.ஜ.க-வுக்கு சவால் விடுத்த மம்தா பானர்ஜி - சட்டமன்றத்தில் காரசார பேச்சு!

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக உத்தர பிரதேசம் சென்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாக்குச் சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் விருப்பப்பட்டால் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று மம்தா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் குறித்து நேற்று மேற்கு வங்க சட்டமன்றத்தில் பா.ஜ.கவை விமர்சித்து மம்தா பானர்ஜி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “ஆட்டம் இன்னும் முடியவில்லை. சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 4 மாநிலத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தாலும் கூட, நாடு முழுவதும் உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிகூட இல்லாத பா.ஜ.க-வால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எளிதாக நடந்திராது. எங்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் (பா.ஜ.க) கடக்க மாட்டீர்கள்” என எச்சரித்துள்ளார்.

Also Read: “மலைவாழ் மக்களையும் விட்டுவைக்காத பா.ஜ.க அரசு” : மாநிலங்களவையில் விளாசிய கனிமொழி சோமு எம்.பி!