India

திருமண விழாவில் நடந்த துயரம்.. பலகை உடைந்ததால் கிணற்றில் விழுந்து 13 பெண்கள் பரிதாப பலி!

உத்தர பிரதேச மாநிலம், நெவுவா நவுராங்கியா என்ற பகுதியில் திருமண விழா நடைபெற்றுள்ளது.அப்போது அங்கிருந்த கிணறு ஒன்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த பலகையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அமர்ந்து கொண்டு திருமண நிகழ்வுகளை வேடிக்கைபார்த்து வந்துள்ளனர்.

அப்போது திடீரென சுமை தாங்க முடியாமல் அந்த பலகை உடைந்துள்ளது. இதனால் அதன்மேல் அமர்ந்திருந்த அனைவரும் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர். இதைப்பார்த்து திருமண வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போஸிஸாரும், தீயணைப்பு வீரர்களும் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 13 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குஷிநகர் மாவட்ட நிர்வாகம் ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஏன்.. உங்களுக்கு மட்டும்தான் பசிக்குமா?” : கடுப்பான நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு!