India

பாம்பிடம் கடி வாங்கி உரிமையாளர்களை காப்பாற்றிய நாய்: புதுச்சேரியில் நெகிழ்ச்சி சம்பவம்!

புதுச்சேரி மூலக்குளம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரமணி. இவரது மனைவி சித்ரா. இவர்கள் தங்களது வீட்டில் லெனி, மிஸ்டர் என பெயரிடப்பட்ட 2 வெளி நாட்டு நாய்களை வளர்த்து வருகின்றனர்.

இந்த நாய்களை இரவு நேரத்தில் கட்டிப்போடாமல் அப்படியே விட்டுவிடுவர். இதனால் இரவு முழுவது வீட்டைச் சுற்றிச் சுற்றி கண்காணித்து வரும். இந்நிலையில் திடீரென மிஸ்டர் என்ற நாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நாயை மருத்துவரிடம் அழைத்துச் சென்றும் சோர்வுடனே இருந்துள்ளது. எதனால் நாய் சோர்வுடன் இருப்பது தெரியாமல் தம்பதிகள் வருத்தத்துடன் இருந்துள்ளனர். பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றபோது கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று செத்துக் கிடந்ததைப் பார்த்து சித்ரா அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர்தான், வீட்டிற்குள் புகுந்த பாம்பை நாய் கடித்து கொன்றது தெரிந்தது. இதனால்தான் நாய்க்கு விஷம் ஏறி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் நாயை மருத்துவரிடம் கூட்டிச் சென்றனர். தற்போது நாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டுக்குள் புகுந்த பாம்பை நாய் கொன்று உரிமையாளர்களைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கல்லூரி விடுதியின் குளியலறையில் இறந்துகிடந்த மாணவி : ஆந்திராவில் ‘பகீர்’ சம்பவம் - நடந்தது என்ன?