India

மருத்துவ உதவி கேட்ட சிறுமியிடம் சில்மிஷம்; கொலை மிரட்டல் விடுத்தும் அஞ்சாமல் போலிஸில் புகாரளித்த சிறுமி!

உதவிக் கேட்டுச் சென்ற 12 வயது சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த அருண் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் டெல்லியில் உள்ள பாண்டவ் நகரில் நடந்துள்ளது.

பாண்டவ் நகரின் யமுனா காதர் பகுதியில் தாய் தந்தையுடன் வசித்து வருகிறார் 12 வயதுடைய சிறுமி. அண்மையில் இந்த சிறுமியின் தந்தை பணி நிமித்தமாக சொந்த ஊரான உத்தர பிரதேசத்திற்கு சென்றிருக்கிறார்.

அந்த வேளையில் சிறுமியின் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அப்போது அண்டை வீட்டில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்குமாறு சிறுமியிடம் அந்த தாயார் கூறியிருக்கிறார்.

அதன்படி பக்கத்து வீட்டில் இருந்த அருண் என்பவரிடம் சென்று தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை உதவுமாறு கேட்ட சிறுமியை மருந்து வாங்க கடைக்கு போகலாம் எனக் கூறி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார். ஆனால் சிறுமியோ பாண்டவ் நகர் போலிஸாரிடம் நடந்ததை கூறி புகாரளித்திருக்கிறார்.

புகாரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலிஸார் சிறுமியின் வாக்குமூலத்தை பெற்று அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்ய வைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக பேசியுள்ள பாண்டவ் நகர் காவல்துறையினர், பாலியல் குற்றவாளியை தொடர்ந்து தேடி வருகிறோம். விரைவில் பிடிபடுவார் எனக் கூறியிருக்கிறார்கள்.