India

மகளின் காதலனை கொலை செய்துவிட்டு திருடன் என நாடகமாடிய தந்தை... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லாலன் சைமன். இவரது மகளின் அறையில் நேற்று இரவு சத்தம் கேட்டுள்ளது. இதனால் லாலன் மகளின் அறைக்குச் சென்று கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால், கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது வாலிபர் ஒருவர் மகளின் அறையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் கையில் வைத்திருந்த கத்தியால் அந்த வாலிபரை லாலன் குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து அவர் காவல்நிலையத்திற்கு போன் செய்து, "எனது வீட்டில் திருடன் நுழைந்துவிட்டான், அவனைக் கத்தியால் குத்திவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் விரைந்து அவரது வீட்டிற்கு வந்தனர். பின்னர் உயிரிழந்த அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து போலிஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உயிரிழந்த வாலிபர் பெயர் அனீஷ் ஜார்ஜ். இவர் திருவனந்தபுரம் கல்லூரியில் படித்து வந்துள்ளார். லாலன் சைமனின் மகளை அனீஷ் ஜார்ஜ் காதலித்து வந்துள்ளார். இதற்கு லாலன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று காதலியைச் சந்திப்பதற்காக அனீஷ் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது மகளின் காதலன் அனீஷ் ஜார்ஜை கொலை செய்துவிட்டு திருடன் என லாலன் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து லாலன் சைமனை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் காதலனைக் கொலை செய்துவிட்டு திருடன் என நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “நம்மைப் பற்றி எதிர்கால மக்கள் கொண்டிருந்த கருத்து என்ன தெரியுமா?” : ‘காலப்பயணி’ டிட்டர் சொன்னது என்ன?