India
“தெரியாம திருடிட்டோம்.. இனி ஏழைகள் வீட்டுல திருடமாட்டோம்”: கடிதம் எழுதி பொருட்களை ஒப்படைத்த கொள்ளையர்கள்!
உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான தினேஷ் திவாரி என்பவரின் கடையில் இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், கடந்த சில நாட்களுக்கு முன் திருடுபோனது.
இதுதொடர்பாக போலிஸில் தினேஷ் திவாரி புகார் அளித்தார். அவரது புகாரில், “ரூ.40,000 கடன் வாங்கி வெல்டிங் மெஷின் வாங்கி தொழில் செய்து வந்தேன். தற்போது அதனை திருடிச் சென்றுவிட்டனர். மேலும் கடையில் இருந்த கருவிகள் உள்ளிட்ட பிற பொருட்களை காணவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இந்த திருட்டுச் சம்பவம் குறித்து போலிஸார்விசாரித்து வந்த நிலையில், தினேஷ் திவாரியின் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள காலி இடத்தில் மூட்டையில் கட்டப்பட்ட பை ஒன்று கிடந்தது.
அதில், தினேஷின் கடையில் திருடப்பட்ட பொருட்கள் இருந்தன. மேலும், அதில் வைக்கப்பட்டிருந்த கடிதத்தில், “இதில் தினேஷ் திவாரியின் பொருட்கள் உள்ளன. உங்களது வறுமை நிலைமையைப் பற்றி வெளியே கேட்டு தெரிந்து கொண்டோம்.
அதனால், உங்களது பொருட்களை மீண்டும் உங்களிடம் சேர்ப்பதற்காக இங்கு வைத்துள்ளோம். இனிமேல் இதுபோன்று ஏழைகள் வீட்டில் திருடமாட்டோம்” என எழுதி வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸ் அதிகாரிகள், அந்தக் கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். திருடர்கள் வைத்துவிட்டுச் சென்ற பையை, தினேஷ் திவாரியிடம் ஒப்படைத்தனர்.
திருடிய பொருட்களை திரும்ப ஒப்படைத்து, ஏழைகள் வீட்டில் திருடமாட்டோம் என திருடர்களே கடிதம் எழுதிவைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கீழ்வெண்மணியும் கீழ்த்தரமான விமர்சனமும்” : ச.தமிழ்ச்செல்வனுக்கு முரசொலி பதிலடி!
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
-
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!