India

கார்கோ பகுதியை திறந்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மும்பை - அபுதாபி விமானத்தில் என்ன நடந்தது?

விமானத்தில் பயணிகளின் பேக்கேஜ்களை கையாளும் லோடுமேன் ஒருவர், சரக்கு பெட்டியிலேயே தூங்கி அபுதாபிக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் பயணிகளின் பேக்கேஜ்களை கையாளும் லோடுமேன் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மும்பையில் இருந்து அபுதாபி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணிகளின் லக்கேஜ்களை சரக்கு பெட்டியில் ஏற்றிவிட்டு அசதியில் அங்கேயே தூங்கிவிட்டார்.

விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டவுடன்தான் தான் கார்கோ பகுதியிலேயே தூங்கியதை உணர்ந்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அபுதாபியில் விமானம் தரையிறங்கியது.

அதன்பிறகு பேக்கேஜ்கள் வைக்கும் பகுதி திறக்கப்பட்ட பிறகுதான் விமானத்தில் லோடுமேன் இருப்பது விமான நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அபுதாபி அதிகாரிகள் அந்த லோடுமேனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, அவரது உடல் நிலை சீராகவும் இயல்பாகவும் இருப்பதை உறுதி செய்தனர்.

பிறகு அபுதாபியில் உள்ள அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு, இண்டிகோ லோடுமேன் அதே விமானத்தில் பயணியாக மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய விமான நிறுவனத்தின் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக (DGCA) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்.. “சும்மா விடமாட்டேன்.. கோர்ட்டுக்கு போவேன்” : கொதித்த ரோஜா.. காரணம் என்ன?