India

கணக்கெடுப்பின் போது பெண் வனக்காவலருக்கு நேர்ந்த சோகம்: நடுக்காட்டில் நடந்தது என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் தடோபா அந்தாரி புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு வனக்காவலராக சுவாதி துமனே என்ற பெண் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அகில இந்தியப் புலி மதிப்பீடு (AITE) 2022 திட்டத்தின் கீழ், புலிகளைக் கணக்கெடுப்பதற்காக மூன்று வன ஊழியர்கள் உதவியுடன் நேற்று சுவாதி துமனே சென்றுள்ளார்.

இந்தக்குழுவினர் காட்டுப்பகுதியில் நடந்து சென்றபோது 200 மீட்டர் தூரத்தில் ஒரு புலியைக் கண்டுள்ளனர். இதனால் அவர்கள் அரை மணி நேரம் அப்படியே நின்றிருந்தனர். இதையடுத்து புலி காட்டுப்பகுதியில் எப்படி செல்கிறது என்பதைக் கண்காணிக்கச் சுவாதி துமனே புலியின் பின்னால் சென்றுள்ளார்.

இதை உணர்ந்த புலி அவர் மீது பாய்ந்து தாக்கி அவரை உடனே காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. பின்னர் புலியைப் பின்தொடர்ந்த உதவியாளர்கள் வனக் காவலர் சுவாதி துமேவை சடலமாகத்தான் மீட்டனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

10 வயது கொண்ட மாயா என்ற புலிதான் பெண் வனக்காவலரை தாக்கி கொலை செய்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புலி ஏற்கனவே இப்படி மூன்று பேரைக் கொலை செய்துள்ளது. 2017ம் ஆண்டு வன ஊழியர் ஒருவரையும், 2020ம் ஆண்டு பெண் ஒருவரையும், தற்போது பெண் வனக்காலவரை கொலை செய்துள்ளது. இதையடுத்து வனப்பகுதி அருகே இருக்கும் மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: ”மசோதா நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டங்கள் தொடரும்” - விவசாயிகள் திட்டவட்ட அறிவிப்பு!