India

"ரயில்களில் இனி அசைவ உணவுகள் கிடைக்காது... Veg Only" : IRCTC முடிவால் அதிர்ச்சி!

பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அசைவ உணவு உண்போருக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, IRCTC சில ரயில்களில் அசைவ உணவுக்கு தடை விதிக்க உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) விரைவில் சில ரயில்களில் 'Vegetarian Friendly Travel' சேவை வழங்க உள்ளதாகவும், அசைவ உணவுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வழித்தடங்களில் ஓடும் ரயில்களில் இந்த நடைமுறையைக் கொண்டுவர உள்ளது. இதனால் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் ரயில்களில் சைவ உணவு மட்டுமே கிடைக்கும்.

சாத்விக் கவுன்சில், Vegetarian Freindly சேவைகளை வழங்குவதற்காக IRCTC உடன் கூட்டு சேர்ந்துள்ளது. IRCTC-யால் இயக்கப்படும் டெல்லியில் இருந்து கத்ராவிற்குச் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், "சாத்விக்" சான்றிதழ் பெறும் என்றும், அதில் அசைவ உணவுகள் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு உணவு பரிமாறும் பணியாளர்கள் அசைவ உணவைக் கையாள மாட்டார்கள், அவர்கள் தயாரிக்கும் சமையலறையில் சைவப் பொருட்களைத் தவிர வேறு எதையும் கையாள மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி-யின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசைவ உணவு உண்போர் மீது பா.ஜ.க அரசு தாக்குதல் நடத்தியுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில், பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்திற்குட்பட்ட வதோதரா மற்றும் ராஜ்கோட் மாநகராட்சிகளில் உள்ள உணவகங்களில் இனி அசைவ உணவுகளைக் காட்சிக்கு வைக்கக்கூடாது என அம்மாநகராட்சிகளின் மேயர்கள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மத உணர்வு புண்படுது.. ஹோட்டல்களில் இறைச்சி உணவுகளை வெளியில் வைக்கக்கூடாது” : குஜராத்தில் அதிர்ச்சி!