India

“முன்னாள் பிரதமர் உங்களுக்கு வேடிக்கைப் பொருளா?” : பா.ஜ.க அமைச்சருக்கு வலுக்கும் கண்டனம்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் வெளியிட்ட பா.ஜ.க அமைச்சருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டுவதாக பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றார்.

மருத்துவமனைக்கு சென்ற பா.ஜ.க அமைச்சர் மன்சுக் மாண்டவியா தன்னுடன் ஒரு போட்டோகிராஃபர் பட்டாளத்தையே அழைத்துச் சென்றிருக்கிறார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள மன்மோகன் சிங்கின் மகள் தாமன் சிங், மன்சுக் மாண்டவியாவுடன் புகைப்படக்காரரும் உள்ளே வருவதற்கு எனது தாய் அனுமதிக்கவில்லை. ஆனாலும் அவரது பேச்சை கேட்காமல் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.

எனது தந்தை முதியவர். அவர் ஒன்றும் உயிரியல் பூங்காவில் இருக்கும் மிருகம் அல்ல. இக்கட்டான சூழலில் இருந்து விடுபட வேண்டும் என நினைக்கிறோம். பார்வையாளர்கள் எவரையும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் தந்தைக்கும் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் வந்து விசாரித்தது மகிழ்ச்சிதான். இருப்பினும், இந்த சூழலில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கும் மனநிலையில் என்னுடைய பெற்றோர் இருக்கவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் இந்தச் செயலுக்கு அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பா.ஜ.கவினர் தங்களது விளம்பர வெறியை இந்த இக்கட்டான நேரத்திலும் வெளிப்படுத்தி தங்கள் தரத்தைக் காட்டுவதாக பலரும் ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: ”அவர் ஒன்றும் zoo-ல் இருக்கும் விலங்கு அல்ல” - ஒன்றிய அமைச்சரின் செயலால் மன்மோகன் சிங் மகள் கொதிப்பு!