India

விவசாயிகள் மீது கார் ஏற்றிய ஆஷிஷ் மிஸ்ரா நேபாளத்துக்கு தப்பிச் சென்றாரா? - அதிர்ச்சி தகவல்!

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு பேரை மட்டுமே உத்தர பிரதேச போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தர பிரதேச போலிஸ் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பிருந்தது.

ஆனால் அவர் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. அவரது கைபேசியை போலிஸார் கண்காணித்தபோது உத்தர பிரதேசம் - நேபாள எல்லையில் அவர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேபாள எல்லையில் உள்ள போலிஸாருக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை தேடுவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உச்சநீதிமன்றத்தில் லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதில் இதுவே வேறு குற்றவாளியாக இருந்தால் இப்படித்தான் சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவீர்களா? மற்ற குற்றவாளிகளை எப்படி அரசு நடத்துமோ அதேபோல் இந்த வழக்கிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் போலிஸார் சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக் குழுவின் முன்பு ஆஜராகவில்லை என்றும் நேபாளத்துக்குத் தப்பி சென்றுவிட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்ட அறிக்கையில், ஆஷிஷ் மிஸ்ராவை போலிஸாரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றி வருகிறார். போலிஸார் அவரைக் கைது செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

Also Read: விவசாயிகளை ஏற்றிக் கொன்ற காரில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு: திட்டமிட்ட படுகொலையா? - பகீர் தகவல்!