India

“பஜ்ஜி சாப்பிட்ட தாய், மகன் உயிரிழப்பு” : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பார்வதி. இவரது மகன் சோமனிங்கப்பாவு. இந்நிலையில் பார்வதி தனது நிலத்தில் வேலை செய்துவிட்டு மாலை வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர் வீட்டில் பார்வதி பஜ்ஜி சுட்டு, மகன் சோமனிங்கப்பாவுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்திலேயே இருவரும் மயக்கமடைந்துள்ளனர்.

இதைப் பார்த்த அருகே வசிப்பவர்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து இருவரது பிரேத பரிசோதனை அறிக்கையிலும், விஷம் கலந்த பஜ்ஜி சாப்பிட்டதால்தான் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து போலிஸாரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் அருகே வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பார்வதி, தன் மகனுக்குப் பெண் கிடைக்காத ஏக்கத்தில் இருந்து வந்ததாகக் கூறியுள்ளனர்.

இதனால் இருவரும் பஜ்ஜியில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு யாராவது பஜ்ஜி மாவில் விஷம் கலந்தார்களா என்ற கோணங்களில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “என்னைப்போல 3 பெண்கள்” : கணவரின் 4வது திருமணத்தால் அதிர்ச்சி - கலெக்டரிடம் மனைவி அளித்த பகீர் புகார்!