India

மருத்துவ மாணவர்கள் RSS தலைவரை பற்றி படிக்கவேண்டுமா? : பா.ஜ.கவின் காவித் திணிப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தொடர்ச்சியாகக் கல்வியைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பாடத்திட்டத்தில் தமது காவிமய கருத்துக்களை எப்படியாவது புகுத்திடவேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகம் முதல் பள்ளி மாணவர்களின் பாடங்கள் வரை கல்வியை காவிமயமாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே புதிய கல்விக்கொள்கை போன்ற திட்டங்களை ஒன்றிய பா.ஜ.க அரசு கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவ மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெக்டேவர் குறித்துக் கற்பிக்கப்படும் என மாநில கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் பேசியது கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங், "மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு அம்பேத்கர், விவேகானந்தர், ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெக்டேவர் மற்றும் பாரதிய ஜன சங்கத் தலைவர் தீனதயாள் உபாத்யாய ஆகியோர் குறித்து கற்பிக்கப்படும்.

இவர்களை குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்வதன் மூலம் நல்லொழுக்கம், நன்னெறி, சமூக, மருத்துவப் பண்பாடு ஆகியவை கொண்டு சேர்க்கப்படும். மேலும் ஆயுர்வேத வித்தகரான மகரிஷி சரகா, சுஷ்ருத் முனிவர் ஆகியோர் பற்றியும் கற்றுக்கொடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “மழை தண்ணீர் தேங்கிய குண்டும் குழியுமான சாலையில் அழகிப்போட்டி”: பா.ஜ.க அரசுக்கு பாடம் புகட்டிய பெண்கள்!