India

இந்திய அளவில் பரவிய உதயநிதியின் 'AIIMS செங்கல்' மாடல்... பீகாரில் செங்கல் சேகரிக்கும் இளைஞர்கள்!

தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாநிலம் முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனையை கையில் வைத்துக் காட்டியது பெரும் வரவேற்பைப் பெற்றது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறி 6 ஆண்டுகள் ஆன பின்னும், அடிக்கல் நாட்டியே 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஒரு பணியும் நடைபெறாதது குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அ.தி.மு.க-பா.ஜ.க இணைந்து மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையொடு எடுத்துவந்துள்ளேன்” எனக் கூறி ஒரு செங்கலை காட்டினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த எய்ம்ஸ் செங்கல் பரப்புரை பெரும் தாக்கத்தை எற்படுத்தியது.

இந்நிலையில் பீகார் மாநிலத்திலும் இதேபோன்றதொரு விவகாரம் கிளம்பியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஒன்றிய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆனால் ஒரு வருடம் ஆகியும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் கூட நாட்டப்படவில்லை.

இதனைக் கண்டிக்கும் விதமாக மிதிலா மாணவர் அமைப்பு, செப்டம்பர் 8ஆம் தேதி எய்ம்ஸ் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தர்பங்காவில் அடையாள அடிக்கல் நாட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக வீடுகளிலிருந்து செங்கல் சேகரிக்கும் பணியை அந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது. தர்பங்காவில் உள்ள மக்களிடம் இருந்து ஒரு லட்சம் செங்கற்களை மாணவர் சங்கத்தினர் சேகரித்தவுடன் அதை மோடி அரசுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காமல் காலந்தாழ்த்தி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தொடங்கிய ‘செங்கல் பரப்புரை’ பீகார் வரை பரவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "மதுரை AIIMS பணிகள் எப்ப தொடங்கும்னு எங்களுக்கே தெரியாது” : கைவிரித்த ஒன்றிய அரசு... மக்கள் அதிர்ச்சி!