India

IIT-களில் அவலம்... சாதிய பாகுபாட்டால் கல்வியைத் தொடர முடியாமல் வெளியேறும் 72% பட்டியலின மாணவர்கள்..!

இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகள் இருப்பதாகக் கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்துவந்த நிலையில், 72% பட்டியலின மாணவர்கள் பாதியிலேயே ஐ.ஐ.டியில் இருந்து வெளியேறியது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஏழு ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு பிரிவில் சேரும் பட்டியலின மாணவர்கள் தங்களின் கல்வியைத் தொடராமல் பாதியிலேயே விட்டு வெளியேறுவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்து இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது.

மேலும், ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்திலிருந்து வெளியேறும் 10 மாணவர்களில் 6 பேர் இட ஒதுக்கீட்டு பிரிவினர். இப்படி இடைநிற்றலில் அசாம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு மட்டும் 88% மாணவர்கள் கல்வியைத் தொடராமல் பாதியிலேயே வெளியேறியுள்ளனர்.

அதேபோல், டெல்லி ஐ.ஐ.டியில் 2018ஆம் ஆண்டு பாதியில் வெளியேறிய 10 மாணவர்களும் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்தவர்கள்தான். இங்கு 76% மாணவர்கள் படிப்பைப் பாதியில் விட்டு வெளியேறியுள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 10 மாணவர்கள் கல்வியை தொடரமுடியாமல் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெளியேறியுள்ளனர். இதில் 6 பேர் பட்டியலின மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசின் இந்தப் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது நாட்டில் உள்ள ஐ.ஐ.டி பல்கலைக்கழகங்களில் சாதிய பாகுபாடுகள் இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியவந்துள்ளது.

Also Read: “மோடி அரசுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இல்லை” : நோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜி கடும் தாக்கு!