India

ஜார்க்கண்டில் ஆட்சியைக் கவிழ்க்க ரூ.1 கோடி பேரம்... பா.ஜ.க மீது காங்கிரஸ் MLA பரபரப்பு குற்றச்சாட்டு!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசைக் கவிழ்க்கச் சதி நடப்பதாகக் கூறிய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆட்சியைக் கவிழ்க்க ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த ஹேமந்த் சோரன் உள்ளார்.

இந்நிலையில் இந்த கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க தன்னிடமும் ரூ.1 கோடிக்குப் பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ நமன் பிக்சல் கொங்காரி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நமன் பிக்சல் கொங்காரி, “காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மூலம் மூன்று பேர் என்னை பலமுறை அணுகினர். அவர்களை வெளியேறச் சொன்னபோது ரூ. 1 கோடிக்கும் மேல் தருவதாக என்னிடம் கூறினார்கள்.

நான் இதுபற்றி அப்போதே காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆலம்கீர் ஆலம் மற்றும் காங்கிரஸ் ஜார்க்கண்ட் பொறுப்பாளர் ஆர்.பி.என்.சிங் ஆகியோருக்கு தகவல் கொடுத்தேன். இது குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கும் தெரிவித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் சட்டசபையில், 81 உறுப்பினர்களில், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30, காங்கிரஸ் 16, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3, ராஷ்டிரிய ஜனதா தளம் 1, பாரதீய ஜனதா கட்சி 25 உறுப்பினர்கள் உள்ளனர்.

Also Read: #Pegasus: "ஒன்றிய அரசே... ஒட்டு கேட்பதை நிறுத்து" - ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்த மதுரை எம்.பி!