India

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்... சூட்கேஸில் உடலை எடுத்து சென்று எரிப்பு... ஆந்திராவில் கொடூரம்!

ஆந்திர மாநிலம், திருப்பதியில் அண்மையில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இதையடுத்து எரிந்த நிலையில் இருந்தது புவனேஷ்வரி என்ற பெண் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்திய போலிஸாருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. புவனேஷ்வரியின் கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டியே மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் மனைவி கொரோனாவால் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடலை மருத்துவமனை நிர்வாகமே எரித்துவிட்டதாகவும் உறவினர்களையும் மற்றவர்களையும் ஏமாற்றி நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

புவனேஷ்வரியும், ஸ்ரீகாந்த் ரெட்டியும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். ஹைதராபாத்தில் புவனேஷ்வரி ஒரு மென்பொருன் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் இவர்கள் திருப்பதி வந்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீகாந்த் தனது மனைவியை வீட்டிலேயே கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு பெரிய சூட்கேஸ் பெட்டியில் வைத்து எடுத்து சென்று எரித்தது போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதை உறுதி செய்யும் விதமாக ஸ்ரீகாந்த தனது குழந்தையுடன் பெரிய சூட்கேஸ் பெட்டியில் வீட்டை விட்டு வெளியேவரும் சி.சி.டி.வி காட்சியும் வெளியாகியுள்ளது.

எதற்காக ஸ்ரீகாந்த் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்தார் என்பது தெரியாததால் மேலும் அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கக்கூடும் என போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: பிறந்த குழந்தையை விற்பனை செய்த 9 பேர் கொண்ட கும்பல் கைது: போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!