India

மக்களை காப்பற்றுவதற்கு பதில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மோடி அரசு? : மாணவர்கள் ஆவேசம் !

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே சிறுபான்மையினர், தலித் மக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு விரோதமான சட்டங்களை தொடர்ச்சியாக அமல்படுத்தி வருகிறது.

பணமதிப்பிழப்பு துவங்கி, புதிய வேளாண் சட்டம் வரை பா.ஜ.கவின் ஏழு ஆண்டு ஆட்சியில் மக்கள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த துயரங்கள் போதாது என்று கொரோனா தொற்றும் மக்களை வாடி வதைத்து வருகிறது.

'நீட்' தேர்வைக் கொண்டு வந்து ஏழை எளிய மாணவர்களின் கல்வி கனவைச் சிதைத்தது போதாது என்று, பள்ளி - உயர்கல்வி செல்லும் தமிழக மாணவர்களின் கனவையும் குழிதோண்டிப் புதைக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ளது.

நாடுமுழுவதும் இந்தப் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததிலிருந்து தற்போது வரை இத்திட்டத்திற்குப் பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் மடிந்துவரும் நிலையில், புதிய கல்விக் கொள்கையை பா.ஜ.க அரசு அமல்படுத்த நினைக்கிறது.

மக்களும், மாநில அரசுகளும் கொரோனா அச்சத்தில் இருப்பதை நன்றாகத் தெரிந்து கொண்ட மோடி அரசு, இதைவிட்டால் இந்தியாவின் கல்வியைச் சிதைக்க வேறு வாய்ப்பு கிடைக்காது என்பதால் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தத் திட்டம் வகுத்துள்ளது.

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் 17-ம் தேதி ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 17-ல் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் காணொலியில் அமைச்சர் ரமேஷ்பொக்கிரியால் ஆலோசனை நடத்துகிறார்.

தற்போது இந்தியாவே பேரழிவை சந்தித்து வரும் நிலையில், இதிலிருந்து மக்களை காப்பற்றுவதற்கு பதில், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதுதான் உங்களுக்கு முக்கியமாக தெரிகிறதா? என கல்வியாளர்களும், மாணவர் சங்கங்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: கொரோனா 2வது அலையில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!