India

கொரோனா அச்சத்தால் யாரும் உதவ முன்வரவில்லை... மனைவியின் கண்முன்னே உயிரிழந்த கணவர் - ஆந்திராவில் சோகம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்திற்கு மேல் பதிவாகிறது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்தே செல்வதால் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் சுகாதாரத்துறையே முடங்கியுள்ளது.

கொரோனா பரவல் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் யாருக்காவது உதவி தேவைப்பட்டால், கொரோனா அச்சத்தால் அவர்களுக்கு உதவி செய்யவே மக்கள் அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், மித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்குச் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் தனது மனைவியுடன் சிகிச்சைக்காகப் பெங்களூருக்குச் செல்ல குப்பம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது திடீரென சந்திரசேகருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் ரயில்வே நடைபாதையில் கீழே விழுந்துள்ளார். அப்போது அருகே இருந்தவர்களிடம் உதவி செய்யுமாறு அவரது மனைவி கேட்டுள்ளார். ஆனால் கொரோனா தொற்று அச்சத்தால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் சந்திரசேகர் சில மணி நேரங்களிலேயே மனைவியின் மடியிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்குப் பலர் தாங்களாகவே முன்வந்து உதவி செய்து வருகின்றனர். இருந்தபோதிலும், பல இடங்களில் கொரோனா அச்சத்தால் மக்களிடம் இருக்கும் மனிதநேயம் மறைந்து வருவதை இதுபோன்ற சம்பவங்கள் நமக்குக் காட்டுகின்றன.

Also Read: சுகாதார கட்டமைப்பில் தோல்வியடைந்த மத்திய பிரதேசம் : மரத்தடியில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் அவலம்!