India
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : பா.ஜ.க-வுக்கு குடைச்சல் கொடுக்க டெல்லி விவசாயிகள் திட்டம்!
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ச்சியாக தங்களின் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதுவரை மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதனால், விவசாயிகள் தங்களின் போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் வீடு வீடாகச் சென்று பா.ஜ.க-வுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பாரதிய கிசான் யூனியன் தலைவர் பல்பீர் எஸ்.ராஜேவால் கூறுகையில், “தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கம், கேரள மாநிலங்களுக்கு விவசாயிகள் குழுக்களை அனுப்புவோம். எந்தவொரு கட்சியையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். ஆனால், வீடு வீடாகச் சென்று பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்வோம். மோடிஅரசு எவ்வளவு மோசமாக விவசாயிகளை நடத்துகிறது என்பது குறித்து மக்களிடம் தெரிவிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல ‘ஸ்வராஜ் இந்தியா’ விவசாய அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், “விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்த பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவோம். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுகுறித்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வோம். ‘பா.ஜ.க-வை ஏன் தண்டிக்க வேண்டும்?’ என்பது பற்றி மக்களிடம் எடுத்துரைப்போம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், "வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்றால், கோதுமை அறுவடை முடிந்தவுடன் 10 லட்சம் டிராக்டர்களுடன் டெல்லி நோக்கி பேரணி தொடங்குவோம்" என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய பிரதேசத்தில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!