India
“பா.ஜ.க தலைவர்கள் ஊருக்குள் நுழையக்கூடாது” - உத்தர பிரதேசத்தில் 'கெத்து' காட்டும் விவசாயிகள்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உட்பட இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து டெல்லி எல்லையில், 90 நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மேலும், தங்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்ட பிரமாண்டமான போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை கண்டித்து உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி, சம்பால் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் 'பா.ஜ.க-வை புறக்கணிக்க வேண்டும்' என்று வாசகம் கொண்ட பதாகைகள் பாரதிய கிசான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் ஆங்காங்கே வைத்து மோடி அரசு மீதான தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.மேலும் சில கிராமங்களில் பா.ஜ.க தலைவர்கள் ஊருக்குள் நுழையக் கூடாது என்று தெரிவித்தும் பதாகைகளை வைத்துள்ளனர்.
இந்த பதாகைகளை உத்திர பிரதேச போலிஸார் அப்புறப்படுத்த முயன்றபோது, பாரதிய கிசான் யூனியன் உறுப்பினர்கள், ‘விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க முள்வேலி அமைக்க முடியுமானால், நாங்கள் அடையாள பதாகைகள் வைக்க முடியாதா’, நீங்கள் இதை அகற்றினாலும், தங்கள் வீடுகள், கடைகளின் சுவர்களில் பா.ஜ.க-வை புறக்கணிப்போம் என்ற வாசகங்களை எழுதுவோம் என கூறினர்.
இது குறித்து கிராம விவசாயிகள் கூறுகையில், டெல்லியில் போராடும் விவசாயிகளைப் பயங்கரவாதிகள், துரோகிகள் என பா.ஜ.க கூறியது எங்களை மிகவும் மன வேதனையடையச் செய்துள்ளது. எங்களின் உணர்வுகள் தான் எங்களை ஒன்றிணைந்து போராட வைத்துள்ளது. வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகுதான் பா.ஜ.க தலைவர்கள் எங்களிடம் பேச வேண்டும். எங்களைச் சந்திக்க எம்.எல்.ஏ, எம்.பி என யாரும் ஊருக்குள் வரக்கூடாது. இதனை அறிவிக்கும் விதமாகத்தான் கிராமம் முழுவதும் பா.ஜ.க-வை புறக்கணிக்க வேண்டும் என பதாகைகள் வைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!