India

“யானைகள் உயிரிழப்பு குறித்து தவறான தகவலை வெளியிடுவதா?” : மோடி அரசின் மோசடி ஆதாரத்துடன் அம்பலம் !

நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து செல்லும் யானைகள் பல்வேறு விபத்துகளில் பலியாகும் சம்பவம் தொடர்கதையாகிறது.

குறிப்பாக, யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

யானைகளை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என யானைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ள இந்த சூழலில், யானைகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய அரசே தவறான தகவலை வெளியிட்டுள்ளது வனவிலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில், திரினாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி சொகட்டா ராய் தனது கேள்வி நேரத்தின் போது, “நாடு முழுவதும் பெருயிர் வன உயிரினங்கள் உயிரிழப்புகள் எண்ணிக்கை மத்திய அரசிடம் உள்ளதா? வனவிலங்குகளை பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ எழுத்துப்பூர்வமாக பதில் ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிலில், நாடு முழுவதும் உயிரிழந்த பெரிய வன உயிரினங்கள் குறித்த தகவல் தங்கள் அமைச்சகத்தில் இல்லை என்றும் இருப்பினும் புலிகள் மற்றும் யானைகள் மரணங்கள் குறித்த தகவல் இருப்பதாகவும் கூறினார்.

அப்போது, யானைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பட்டியலில், கடந்த 3 ஆண்டுகளில், நாடுமுழுவதும் 312 யானைகள் உயிரிழந்திருப்பதாகவும், அதில் அதிகபட்சமாக அஸ்ஸாம் மாநிலத்தில் 76 யானைகளும், ஒடிஷா மாநிலத்தில் 60 யானைகளும், தமிழ்நாட்டில் 37 யானைகளும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில், குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 2017 மற்றும் 2018ல் சுமார் 11 யானைகளும் 2019ல் 15 யானைகளும் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த பட்டியல் தவறாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, மத்திய அரசு வழங்கிய இத்தகவல் தமிழ்நாடு அரசு வனத்துறையிடம் இருக்கும் தகவலுடன் முரண்பட்டதாக உள்ளது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் வன உயிரின ஆர்வலர் ஆண்டனி ரூபின் கிளமெண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் யானைகள் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மட்டும் 2017ல் 125, 2018ல் 84, 2019ல் 108 யானைகள் என மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக 317 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருந்தது.

ஆனால், இதே மூன்று ஆண்டுகளில் நாடுமுழுவதுமே வெறும் 312 யானைகள் உயிரிழந்திருப்பதாகவும், அதேபோல் தமிழ்நாட்டிலும் வெறும் 37 யானைகள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது முரணாக உள்ளது. “நாடாளுமன்ற எம்.பி.,க்கள் எழுப்பும் கேள்விக்கு முறையான பதிலை சரியான தரவுகளுடன் தகவலைத் தராமல் மத்திய அரசு செயல்படுவது, அறியாமையா? அல்லது அலட்சியமா? என்று தெரியவில்லை” என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “6 ஆண்டுகளில் 561 யானைகள் உயிரிழப்பு; கண்டுகொள்ளாத அ.தி.மு.க அரசு” : கொந்தளிக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள்!