India

“ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் : தேர்வர்கள் பாதிக்கப்படுவார்கள்” - சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!

கிராம வங்கிகளின் அதிகாரி நியமனங்களுக்கான நேர்காணலும், கிளார்க் நியமனங்களுக்கான இறுதித் தேர்வும் ஒரே நாளில் நடைபெறவிருப்பதால் தேதியை மாற்றுமாறு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையத்திற்கும், தமிழ்நாடு கிராம வங்கித் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “மண்டல கிராம வங்கி அதிகாரிகள் நியமனங்களுக்கான நேர்காணல் பிப்ரவரி-19 ல் இருந்து 22 வரை வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மண்டல கிராம வங்கிகளின் எழுத்தர் இறுதித் தேர்வுகளும் பிப்ரவரி-20 அன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அழைப்புக் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த இரண்டு தேர்வுகளும் ஒரே தேதியில் இருப்பதால் அது நிறைய தேர்வர்களைப் பாதிக்கக்கூடும். அவர்களில் சிலர் என்னைத் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு கண்டு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

ஆகவே அதிகாரிகள் நியமனத்திற்கான நேர்காணல் தேதியைப் பிறிதொரு நாளுக்கு மாற்றி இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்க வேண்டிய பலரின் பாதிப்பைத் தவிர்க்குமாறு வேண்டுகிறேன்.

பணி நியமனங்களுக்கான தயாரிப்புகளை மாதக் கணக்கில் செய்யும் இளைஞர்களின் சிரமத்தை கணக்கிற் கொண்டு தேதிகள் மோதாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கொரோனா நெருப்பே அணையாத நிலையில் விலையேற்றம் எனும் பெட்ரோலை ஊற்றி வதைப்பதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்!