India

“பட்ஜெட்டில் புதுச்சேரியை புறக்கணித்த பா.ஜ.க அரசு” - நாராயணசாமி குற்றச்சாட்டு!

தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்துள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை என முதலமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போது நாட்டில் 9.5% பணவீக்கம் உள்ளது. உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற பணவீக்கம் கிடையாது. சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது காணொளி மூலம் மாணவர்கள் பாடம் பயின்று வரும் நிலையில் மாணவர்களுக்கு என ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கவேண்டும் ஆனால் அறிவிக்கவில்லை இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

தொடர்ந்து, “நமது அண்டை நாடாக உள்ள சீனா 200 பில்லியன் டாலரை இராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதியை தற்போது போடப்பட்டுள்ள பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. இராணுவத்தை நவீனப்படுத்தி இருக்கவேண்டும். அதற்கான வாய்ப்புகளை வழங்கவில்லை என்று கூறிய அவர் வங்கிகளை தனியார்மயமாக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. சாதாரண மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்காது. அதனால் தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிடவேண்டும்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்துள்ள நிலையில் எந்த ஒரு புதிய திட்டமும் புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா புதுச்சேரிக்கு வந்த போது அதிக நிதி அளிப்போம், மூடப்பட்டுள்ள ஆலைகள், ரேஷன் கடைகளை திறப்போம் என்று அறிவித்து இருந்தார். ஆனால் நேற்றைய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு புதுச்சேரியை புறக்கணிப்பது தெரிகிறது” என தெரிவித்தார்.

Also Read: “ஆக்கபூர்வமான நிதி ஒதுக்கீடுகள் ஏதுமற்ற கானல் நீர் பட்ஜெட்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!