India

“புதுவை 10% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிர்ப்பு: மாநில அரசின் அதிகாரத்தை தொடர்ந்து பறிக்கும் மோடி அரசு!”

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்க கூடிய மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதேபோல் புதுவை மாநிலத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் பத்து சதவீத உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில புதுவை சேர்ந்த மாணவி திவ்யதர்ஷினி என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் புதுவை மாநிலத்தில் மருத்துவப் படிப்பில் சேர கூடிய அரசு பள்ளி பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .

அப்போது மத்திய அரசின் உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஒரே நாடு ஒரே தகுதி என்ற அடிப்படையில் நீட்தேர்வு கொண்டுவரப்பட்டதாகவும் ஆனால் புதுவையில் கொண்டுவரப்படவுள்ள சட்டம் என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப் போகச் செய்யும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் தொடர்பாக தங்களது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசின் சட்டம் குறித்து முடிவு செய்ய 6 வார கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கை என்றும், அரசு பள்ளி மாணவர்களை கொச்சைப்படுத்தும் நடவடிக்கை என்றும் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இது குறித்து 4 வாரத்துக்குள் முடிவெடுத்து உரிய பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Also Read: “தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து உறுதி” - அனிதா நினைவு நூலகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!