India

“பொதுத்துறையை தொடர்ந்து சூறையாடும் மோடி அரசின் அடுத்த ‘பலி’ ?” - தனியார் மயமாகும் இந்திய கப்பல் கழகம்!

பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்பரேட்களுக்கு ஆதரவான டெண்டர், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க தீவிரமாக முயற்சிகள் என பல்வேறு செயல்களை முனைப்புடன் செய்து வருகிறது.

குறிப்பாக சேலம் உருக்காலை, விமான நிலையங்கள், ரயில் பெட்டித் தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவங்கள் மற்றும் ரயில்வே துறை என அனைத்து பொதுத்துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, மக்களுக்குச் சேவை செய்யப்போவதாக பா.ஜ.க அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.

இந்நிலையில், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பாரத் பெட்ரோலியம், எல்.ஐ.சியை தொடர்ந்து ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மத்திய அரசு வைத்திருக்கும் 63.75% பங்குகளை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதாவது, அரசுப் பங்குகளை ஏல நடவடிக்கையின் மூலம் விற்பது குறித்த அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, '3.96 சதவீத அரசுப் பங்கு, 2022' ரூ 2,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும். இது தவிர மேலும் சில பங்குகளும் விற்கப்படும்.

63.75% - 6.80 சதவீத அரசுப் பங்கு, 2060' ரூ 6,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும். மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தில் 2020 டிசம்பர் 24 (வியாழக்கிழமை) அன்று இந்த ஏலங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளும் பங்குகளை வாங்குவோருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள 6.80 சதவீத அரசுப் பங்கில் ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்கு உள்ளது. இந்த பங்குகளை விற்பனை செய்ய கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதமே பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அந்த கூட்டத்தில் தான், பாரத் பெட்ரோலியத்தில் 53.29 சதவிகித பங்குகளை விற்கவும், இந்திய கப்பல் கார்ப்பரேஷனின் 63.75% பங்குகளும், அதன் நிர்வாகமும் தனியாருக்கு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய கண்டெய்னர் கார்ப்பரேஷனின் 30.8% பங்குகளும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே நாட்டின் பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கிவரும் மோடி அரசு தற்போது ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா தனியார் மயமாக்கப்பட்டதால் அதில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

பொருளாதார சரிவை சரிசெய்ய எந்த திட்டமும் வகுக்காமல் வழக்கம்போல் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் வேளையில் மட்டுமே பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

Also Read: அதிமுக அமைச்சரவை மீதான 97 பக்க ஊழல் புகார் மனுவை ஆளுநரிடம் கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்..!