India
தமிழ் மாணவனை தகுதி இழக்கச்செய்யும் அநீதிக்கு முடிவு : தொல்லியல் துறை அறிவிப்புக்கு மதுரை எம்.பி வரவேற்பு!
தொல்லியல் துறை பட்டயப்படிப்பு அறிவிப்பில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்னதாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேப்போல், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் அறிஞர்கள் தமிழ் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டு இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட இருந்தது.
இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள மறு அறிவிப்பில் தகுதிக்கான பிரிவில் செம்மொழி தமிழ் மொழி சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. செம்மொழி அந்தஸ்து உள்ள மற்ற மொழிகளும் சேர்க்கப்பட்டு தொல்லியல் துறை இயக்குனர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை ஆய்வகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியத் தொல்லியல் துறை அறிவித்திருந்த தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான கல்வித்தகுதியில் தமிழ்மொழி சேர்க்கப்படாதது குறித்து எனது கடுங்கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன்.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் திரு மு.க.ஸ்டாலின், தமுஎகச உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளும் அமைப்புகளும் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் அனைத்தையும் சேர்த்துள்ளது.
இந்தியத் தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பினை வரவேற்கிறேன். இந்தியத் தொல்லியல் துறைக்குள் நுழையும் வாசலிலேயே தமிழ் மாணவனை தகுதி இழக்கச்செய்யும் அநீதிக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் அல்லாத பிற செம்மொழிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போக்க தமிழகமே உரத்துக் குரல்கொடுத்தது. இந்தியத்தொல்லியல் துறை தனது விடாப்பிடியான இறுக்கத்தைத் தளர்த்தி மறுஅறிவிப்பு செய்ததைப் போல, “இந்திய பண்பாட்டின் தோற்றத்தையும் பரிமாணத்தையும்” ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவினைக் கலைக்கும் அறிவிப்பினையும் விரைவில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!