India

“மே - ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 60 லட்சம் பேர் வேலையிழப்பு”: பொருளாதாரத்தில் பலத்த அடி வாங்கும் மோடி அரசு!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி, கட்டுமானம், சேவைகள் உள்ளிட்ட தொழில் துறை முடங்கியுள்ள நிலையில் பலரும் வேலையிழந்துள்ளனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியிருந்தாலும், வருவாய் இழப்பைச் சரிசெய்ய சம்பளத்தைக் குறைப்பது, வேலையை விட்டு நீக்குவது போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன.

இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு பாதிப்புகள் குறித்து இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது, நடப்பாண்டின் மே - ஆகஸ்ட் காலத்தில், இந்தியாவில் ‘வொயிட் காலர்’ ஜாப் (White collarprofessional jobs) எனப் படும் ‘அழுக்குப்படாத வேலைகள்’ பிரிவில் 60 லட்சம் பேர்வேலையிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“வொயிட் காலர் பிரிவில், 2016- ம் ஆண்டின் மே - ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 1 கோடியே 25 லட் சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர். இது கடந்த நான்கு ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து. 2019 மே - ஆகஸ்ட்காலகட்டத்தில் மொத்தம் 1 கோடியே 88 லட்சம் வொயிட்காலர் வேலைகளாக உயர்ந்திருந்தது.

ஆனால், கொரோனா காரணமாக, 2020 மே - ஆகஸ்ட் காலத்தில், கடந்த நான்காண்டு வளர்ச்சி ஒட்டுமொத்தமாக துடைத்தெறியப்பட்டு, 1 கோடியே 22 லட்சம் வேலைவாய்ப்புகளாக வீழ்ச்சியடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், தொழிற்துறை உற்பத்திப் பிரிவில்தான் கொரோனா பாதிப்பால் அதிகமான வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இத்துறையில் மட்டும் 50 லட்சம் பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Also Read: ஒரே மாதத்தில் 20-29 வயதுக்குட்பட்ட 2.7 கோடி பேர் வேலையிழப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்- விளைவு என்னாகும்?