India

பா.ஜ.க., MP., MLA-க்கள் மீதான 62 கிரிமினல் வழக்குகளை கைவிட்டது கர்நாடக அரசு: கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்!

உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவினால், சட்டம், சுற்றுலா மற்றும் வேளாண் அமைச்சர்கள் உட்பட பல அமைச்சர்கள் மீதான வழக்குகளும் கைவிடப்படும் எனக் கூறப்படுகிறது.

அதில், கர்நாடக அமைச்சர் ஜே.சி.மதுசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் சட்டமன்ற ஒழுங்கு நடவடிக்கை, கலவரம் செய்ய முயற்சித்தது போன்ற குற்றச்சாட்டின் படி பதிவு செய்யப்பட்டதாகும்.

அதேப்போல், காங்கிரஸ் இருந்து பா.ஜ.கவிற்கு தாவிய ஆனந்த் சிங் மீதான வழக்கும் கைவிடப்பட்டுள்ளது. ஆனந்த் சிங் மீது ஹாஸ்பெட் தாலுகா அலுவலகத்தைத் தாக்கியதற்காக 2017 ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் குற்றவியல் மிரட்டல், அரசு ஊழியரைத் தாக்கியது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மேலும், மைசூரு எம்.பி. பிரதாப் சிம்ஹா மீதான வழக்கு நீக்கப்பட்டுள்ளது. ம்.பி. பிரதாப் சிம்ஹா, கடந்த 2017ம் ஆண்டு ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தின் போது அனுமதி இன்றி சென்றதால் அவர்களை தடுத்தற்காக காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், மாண்டியா சுயாதீன எம்.பி. சுமலதா அம்பரிஷ், யெல்பர்காவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ, ஹொன்னல்லியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ மற்றும் முதல்வரின் அரசியல் செயலாளர் எம்.பி. ரேணுகாச்சார்யா ஆகியோர் மீது வழக்குகள் கைவிடப்படுகின்றன.

இந்த வழக்குகளை கைவிடும் முடிவிற்கு கர்நாடக மாநில டிஜி - ஐஜிபி மற்றும் அரசு வழக்கு மற்றும் சட்டத் துறை இயக்குநர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ஆனாலும் பா.ஜ.க அரசு அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் வழக்குகளில் இருந்து பா.ஜ.க எம்.பி.க்கள் மற்றும் எல்.எல்.ஏக்களை தப்பிக்க வைப்பத்தையே குறிக்கோளாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு தற்போது கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

Also Read: “கருகும் பிஞ்சுகள்... இருளும் எதிர்காலம்”: உயிர் பறிக்கும் ஆன்லைன் வகுப்புகள் - எப்போது பேசப்போகிறீர்கள்?