India

'நண்பன்' பட பாணியில் மருத்துவர் அறிவுரைப்படி பெண்ணுக்கு பிரசவம் - கர்நாடகாவில் ஆச்சர்ய சம்பவம்!

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கர்நாடகத்தில் 5 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. இதில் 4 வார ஞாயிறு முழு ஊரடங்கு நிறைவு பெற்று உள்ளது. இந்தநிலையில் ஞாயிறு ஊரடங்கின்போது உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல முடியாததால் வீடியோ காலில் மருத்துவரின் ஆலோசனை பெற்று பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹனகல் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் வாசவி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் அலறித் துடித்தார். இதுபற்றி அறிந்த வாசவியின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்றனர்.

பின்னர் வாசவியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது கணவர் வாகனத்தை தேடி சென்றார். ஆனால் ஞாயிறு ஊரடங்கை காரணம் காட்டி, வாகனத்தை கொண்டு வர டிரைவர்கள் மறுத்து விட்டனர்.

இதனால் வாசவியின் கணவர் செய்வதறியாது திகைத்து நின்றார். இந்தச் சூழலில் வாசவியின் உறவுக்கார பெண் ஒருவர், உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் மகப்பேறு மருத்துவர் பிரியங்கா மண்டகியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது வாசவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது பற்றியும், ஊரடங்கால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாதது பற்றியும் விளக்கிக் கூறினார். இதையடுத்து தனக்கு வீடியோ கால் செய்யும்படி மருத்துவர் பிரியங்கா கூறியுள்ளார். இதனால் அந்தப் பெண்ணும் டாக்டர் பிரியங்காவுக்கு வீடியோ கால் செய்தார். அப்போது பிரியங்கா வீடியோ கால் மூலம் சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

அதன்படி வாசவிக்கு உறவுக்கார பெண்களான மதுலிகா தேசாய், அங்கிதா, ஜோதி, விஜயலட்சுமி, மாதுரி, முக்தா, சிவலீலா ஆகியோர் பிரசவம் பார்த்தனர். இதில் வாசவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் வாசவியும், அவரது உறவுக்காரப் பெண்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் பிறந்த குழந்தையை வீடியோ கால் மூலம் மருத்துவர் பிரியங்காவிடம் காண்பித்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவருக்கு வாசவியும், அவரது உறவினர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை வாசவியும், அவரது குழந்தையும் ஹனகல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழில் நடிகர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில், பிரசவ வலியால் துடிக்கும் பெண்ணுக்கு, பிரசவம் பார்க்க அவரது சகோதரியும் மருத்துவருமான நடிகை இலியானா வீடியோ கால் மூலம் விஜய்க்கு சில அறிவுரைகளை வழங்குவார்.

அதுபோல விஜய்யும், அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து இருப்பார். தற்போது அதே பாணியில் வாசவிக்கும் குழந்தை பிறந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “உலகளவில் உயிரிழந்தோர் 6.63 லட்சமாக உயர்வு” : கொரோனாவால் உலக நிலைமை படுமோசம் - அதிர்ச்சி தகவல்!