India
“ஊரடங்கில் சில்லறை வர்த்தகம் படுமோசம்” : 100 நாளில் சில்லறை வணிகத்தில் ரூ.15.5 லட்சம் கோடி இழப்பு!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, உற்பத்திக் குறைவால் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்ட அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நிறுவனங்கள் பலவும், வருமான இழப்பை ஈடுகட்ட ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் அது மக்களை நேரடியாக பாதித்து வருகிறது.
இதனிடையே, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பொருளாதார சீர்திருத்தத்தைவிட இந்தாண்டு மோசமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்திருந்தது. இதனையடுத்து, ஊரடங்கு காரணமாக, இந்தியாவின் உள்நாட்டு சில்லரை வர்த்தகத்துறையில், கடந்த 100 நாட்களில் மட்டும் ரூ.15.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் கூறுகையில், “இந்தியாவின் சில்லரை வர்த்தகம் கடந்த 100 நாட்களில் ரூ. ரூ.15.5 லட்சம் கோடி மதிப்புள்ள வணிகத்தை இழந்துள்ளது. தற்போது செய்யப்பட்ட தளர்வுகளுக்குப் பின்னரும், நாடு முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிகச் சந்தைகள் சுமார் 10 சதவிகித வணிகத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும்.
மேலும் 8 சதவிகிதத் தொழிலாளர்கள் மட்டுமே கடைகளில் தங்கள் வேலைகளை மீண்டும் தொடங்க முடியும் என்ற நிலையில் உள்ளனர். அதுமட்டுமின்றி, மற்றொரு புறத்தில், ஜி.எஸ்.டி வகையிலும், வர்த்தகர்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு கொள்கை ஆதரவும் இல்லாத நிலையில், அவர்கள் தங்கள் வணிகத்தின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகின்றனர். இதனால், உள்நாட்டு வர்த்தகம், தற்போது மிக மோசமான காலத்தை எதிர்கொள்கிறது. இந்த ரூ.15.5 லட்சம் கோடி வணிக இழப்பால், மத்திய மற்றும் மாநில அரசுகளும் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான வரி வருவாயை இழந்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தொகுதி மறுவரையறை : இதுதான் தி.மு.க-வின் நிலைப்பாடு - பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
-
தவெக அரசின் தனித்தீர்மானத்தால் எதுவும் செய்யமுடியாது; தமிழ்த்தாயையுமா ஏமாற்ற வேண்டும்? : முரசொலி காட்டம்!
-
காவிரி விவகாரம் ; பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருபோதும்... : தவெக அரசுக்கு வலியுறுத்திய ஓ.பன்னீர்செல்வம்!
-
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!