India

“பா.ஜ.க ஆட்சியில் இந்தியா தனது மதிப்பையும், அதிகாரத்தையும் இழந்து வருகிறது” - ராகுல் காந்தி தாக்கு!

பா.ஜ.க அரசால் இந்தியா அனைத்து இடங்களிலும் மரியாதையை, அதிகாரத்தை இழந்து வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு சரக்குகளை சாலை மார்க்கமாகக் கொண்டு செல்ல பாகிஸ்தான் வழியாகவே இந்தியா செல்ல வேண்டும். ஆனால், அதற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்ததால், கடல் வழியாக ஈரான் சென்று அங்கிருந்து ஆப்கனுக்கு சரக்குகளை ரயில் மூலம் அனுப்ப இந்தியா திட்டமிட்டது.

இதற்காக ஈரானின் சாபஹர் துறைமுகத்தை சீரமைக்கும் பணியைச் செய்ய ஈரானிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. சாபஹர் துறைமுகத்திலிருந்து ஆப்கன் எல்லை சஹேதான் வரை ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவுடன் ஈரான் மேற்கொண்டது.

இதற்கிடையே, அமெரிக்கா விதித்த தடையால் ஈரானுடன் செய்து வந்த கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா நிறுத்தியது. இந்தச் சூழலில் திட்டத்தைத் தொடங்க இந்தியத் தரப்பிலிருந்து நிதி அளிப்பதில் தாமதமாகி வருவதால் தாங்களே இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்கிறோம் என்று ஈரான் இந்தியாவை இத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது.

சாபஹர் துறைமுகத்திலிருந்து சஹேதான் வரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்திலிருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ள செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிவிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் சர்வதேச வியூகங்கள் அனைத்தும் துண்டு துண்டாகி வருகிறது. அனைத்து இடங்களிலும் இந்தியா தனது மதிப்பையும், அதிகாரத்தையும் இழந்து வருகிறது. பா.ஜ.க மத்திய அரசுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை” என விமர்சித்துள்ளார்.

Also Read: “இதுதான் நல்ல நிலையில் இருப்பதா?” - ஆதாரத்துடன் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி!