India

பாஸ்போர்ட்டை பறித்துக்கொண்டு ‘Quarantine வணிக’ கும்பலிடம் ஒப்படைத்த அதிகாரிகள் - தமிழக மாணவர்கள் அவதி!

கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட முடக்கம் காரணமாக வெளிநாடுகளில் தவித்து வந்த இந்திய மாணவர்கள் கட்டணம் பெற்று சிறப்பு விமானங்களின் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

தாயகம் வரும் மாணவர்களை அவர்களின் அனுமதியின்றி அதிக கட்டணம் வசூலிக்கும் தங்கும் இடங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அதிகாரிகள் அனுப்பி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 30 தமிழக மாணவர்கள் நேற்று ஹைதராபாத் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டு, அவர்களது பாஸ்போர்ட்டுகளை கட்டாயப்படுத்தி பெற்றுக்கொண்டு கட்டாய தனிமைப்படுத்தல் எனும் பெயரில் ஒவ்வொருவருக்கும் 8,000 ரூபாய் கட்டணம் பெறும் தங்கும் இடங்களுக்கு அனுப்பியுள்ளனர்.

கொரோனாவால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து தாயகம் திரும்பியும் பாதுகாப்பற்ற முறையில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அங்கிருந்த காவல்துறையினரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

பாஸ்போர்ட்டை பறித்துக்கொண்டு பேக்கேஜ் அடிப்படையில் தனிமைப்படுத்தலை வணிகமாக்கும் கும்பலிடம் அதிகாரிகளே மாணவர்களை ஒப்படைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் ’The Central Court Hotel' எனும் சொகுசு விடுதியில் பணம் பறிக்கும் திட்டத்தோடு தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களை தமிழக அரசு உடனடியாக மீட்டு, அவர்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து தனிமைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

Also Read: ஒரே நாளில் 3,645 பேருக்கு தொற்று... 46 பேர் பலி - தமிழகத்தில் அதிவேகமாகப் பரவிவரும் கொரோனா!