India

“குடும்பத்தினரே அஞ்சிய நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவரை தகனம் செய்த தாசில்தார்” - கலெக்டர் பாராட்டு!

மத்திய பிரதேச மாநிலம் போபாலை அடுத்த சுஜல்பூரை சேர்ந்த ஒருவர், பக்கவாதம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஏப்ரல் 14ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து சிராயு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 20ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பாதுகாப்பாக உடலை தகனம் செய்ய வேண்டுமென அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். ஆனால் அச்சமடைந்த குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர்.

இதையடுத்து, கொரோனாவால் உயிரிழந்த நபருக்கு இறுதிச்சடங்கு செய்ய தாசில்தார் குலாப் சிங் பாஹல் முன்வந்துள்ளார். மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தூரத்தில் விலகி நின்ற நிலையில், தாசில்தார் குலாப் சிங் இறந்தவரின் உடலுக்கு தீ மூட்டினார்.

இடர் காலத்தில் மனிதநேயத்தோடு செயல்பட்ட தாசில்தார் குலாப் சிங் பாஹலை போபால் கலெக்டர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து, “கொரோனாவுக்கு எதிரான போரில் எங்கள் வீரர்கள் எதையும் இழக்க தயாராக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 'பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் செய்த தரமான சம்பவம்' - ஊரடங்கு வாழ்வின் அற்புதம்!