India

“புலம்பெயர் தொழிலாளர்களின் உயிர்களுக்கு யார் பொறுப்பு?” - ஏழைகளுக்கு மோடி அரசு இழைத்த அநீதி!

கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து மாநில எல்லைகளைக் கடந்து தங்களது வீடுகளுக்கு செல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 22 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

முழு ஊரடங்கு காரணமாக கடைகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், போக்குவரத்து சேவைகள் என அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்படியான சூழலில் ஏராளமான தினசரிக் கூலித் தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் அதிகப்படியானோரும் எந்தவிதமான வாழ்வாதார வசதியோ அல்லது தங்குமிடமோ இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். அப்படியாக புலம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் கால்நடையாக நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

இப்படி தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்களை காவல்துறையினர் ஊரடங்கை மீறி வெளியில் சென்றதற்காக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. 300 கி. மீ தொலைவைத் தாண்டி தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக மக்கள் நடந்து செல்லும் வேளையில் உடல் சோர்வுற்று மற்றும் வாகன விபத்துகளில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 22 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு முறையான பேருந்து வசதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்துக் கொடுக்காததன் விளைவே இத்தகைய உயிர்பலிளுக்குக் காரணம். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டுமென உயிரிழந்தோரின் குடும்பத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.

Also Read: “படேல் சிலை முதல் ராஜபாதை வரை” : மக்கள் பணத்தை வீணடித்துவிட்டு மக்களிடம் நிதி கேட்பது நியாயமா பிரதமரே?