India

“என் குழந்தைங்க பசியால் வாடுது” : ஊரடங்கால் கூலி தொழிலாளிகளுக்கு ஏற்பட்ட அவலம் - அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அறிவித்துள்ள இந்த ஊரடங்கால், நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உணவின்றி தவித்துவருவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் லேபர் சவுக் பகுதி உள்ளது.

அந்தப் பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் கட்டிட வேலைக்காக வந்து சேருவார்கள். நான்கு சாலைகள் சந்திக்கும் டெல்லியின் புறநகர்ப் பகுதியான இங்குதான் கட்டட கான்ட்ராக்டர்கள், நகரங்களுக்கு தேவைப்படும் தொழிலாளர்களைத் தேர்வு செய்வதற்காக வருவார்கள்.

இந்நிலையில், ஊரடங்கு போடப்பட்டிருப்பதால் அந்தப் பகுதியே அமைதியாக இருந்து வருகிறது. பரபரப்பாகவே இருக்கும் அப்பகுதி மயான அமைதியாகக் காட்சி அளிக்கிறது. சிலர் கூட்டமாக அமர்ந்து பொழுதைக் கழித்து வருகின்றனர்.

அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிரபல ஆங்கில நாளிதழ் பத்திரிகையாளர்கள், “நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கும்போது நீங்கள் ஊரடங்கை அனுசரிக்கவில்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

அதற்கு, உத்தர பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ரமேஷ் குமார் என்பவர், “வேலைக்கு எடுக்க யாரும் வரமாட்டார்கள் என்று தெரிந்தாலும், இங்கு வந்து யாராவது அழைத்துச் செல்லமாட்டார்களா என்று தான் காத்திருக்கிறோம். எனக்கு ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பளம். என்னை நம்பி 5 பேர் இருக்கிறார்கள்.

இன்னும் சில நாட்களில் எங்களிடமுள்ள உணவுப் பொருட்கள் தீர்ந்துவிடும். கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு குறித்து தெரிகிறது. ஆனால், என் குழந்தைகள் பசியால் வாடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் டெல்லி அருகே ரிக்‌ஷா வண்டி ஓட்டும் கிஷன்லால் என்பவர் கூறுகையில், “கடந்த நான்கு நாட்களாக எனக்கு வருமானம் ஏதும் இல்லை. என் குடும்பத்திற்கு உணவளிக்க நான் சம்பாதித்தாக வேண்டும். அரசு எங்களுக்குப் பணம் கொடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள். எப்போது, எவ்வளவு கொடுப்பார்கள் என்பதுதெரியவில்லை. எனது குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது” என்கிறார்.

இதே நிலைதான் நாடு முழுவதும் நீடிக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு எப்படி வங்கி கணக்கில் நிவாரணம் அளிக்கும் என்பதும் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏழை மக்களின் நலனில் இந்த அரசு அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்றால் கொரோனா வைரஸால் பலியாவதைவிட பசியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: "50 வயதுக்கு மேற்பட்ட போலிஸார் ஓய்வில் இருங்க” - மண்டல இணை ஆணையர் உத்தரவுக்கு குவியும் ஆதரவு!