India

“ஜனநாயகத்தை அச்சுறுத்தும் மோடி அரசு”: ஜனநாயக நாடுகள் பட்டியலில் 83-வது இடத்தில் இந்தியா! #Report

மோடியின் கடந்த கால ஆட்சியில் பா.ஜ.க அரசு நாட்டுமக்களை பெரிதும் வஞ்சித்து வருகிறது. இந்திய நாட்டில் காக்கப்பட்டுவந்த ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு மக்கள் போராட துவங்கியுள்ளனர். உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு இருந்த நற்பெயருக்கு பெரும் கலங்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பன்முகத்தன்மை, தனிமனித உரிமைகள் இல்லாமல் ஜனநாயகம் நீண்ட காலம் வாழ முடியாது என ஃபிரீடம்ஹவுஸ் (Freedom House) அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘ஃபிரீடம்ஹவுஸ்’ (Freedom House) என்ற அமைப்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய அரசியல் மற்றும் உள்நாட்டு உரிமைகளை கண்காணித்து, அதனடிப்படையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 1948ம் ஆண்டு ஐ.நா.பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் வழிமுறைகளை பின்பற்றி அறிக்கை தயார் செய்து வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக, உலக நாடுகளின் அரசியல் உரிமைகளான, தேர்தல் செயல்முறை, அரசியல் தன்மை, அரசாங்க செயல்பாடுகள் மற்றும் உள்நாட்டு உரிமைகளான கருத்துச் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, தனிப்பட்ட உரிமைகள் போன்ற அடிப்படையாக கொண்டு ‘பிரீடம் ஹவுஸ்’ அறிக்கையை தயாரிக்கிறது.

அந்த வகையில், 2020-ம் ஆண்டுக்கான உலக மக்களின் சுதந்திரம் குறித்த (The Freedom in the World 2020) என்ற அறிக்கையை ‘ஃபிரீடம் ஹவுஸ்’ அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இதில், அரசியல் உரிமைகள், உள்நாட்டு உரிமைகள் எனமொத்தம் 71 புள்ளிகளில் இந்தியா உள்ளது.

இது கடந்த ஆண்டை விட 4 புள்ளிகள் குறைவாகும். அதுமட்டுமின்றி துனிசியா, செனகல் உள்ளிட்ட சிறிய நாடுகளுடன் இந்தியா 83-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த பின்னடைவுக்கு, காஷ்மீர் விவகாரம், குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறை உள்ளிட்டவையே காரணம் என்று ‘பிரீடம் ஹவுஸ்’ கூறியுள்ளது.

மேலும் அதில், “இந்தியா இந்து தேசியவாதத்தை நோக்கி திருப்பப்படுகிறது. இதன் விளைவாக உருவான காஷ்மீர் விவகாரம், குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை எதிர்த்து உருவான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் இந்தியாவின் ஆட்சியை அசைத்து பார்த்துள்ளது.

இதனால், அரசியல் அமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் ரீதியாக இயங்குபவர்கள் பலர் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான பொதுத்தேர்தலை கடந்த ஆண்டு இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ள நிலையில், நாட்டின் அடிப்படை உறுதிப்பாடான பன்முகத்தன்மை, தனிமனித உரிமைகளில் இருந்து பா.ஜ.க அரசு தன்னைத் தூர விலக்கிக் கொண்டுள்ளது. பன்முகத்தன்மை, தனிமனித உரிமைகள் இல்லாமல் ஜனநாயகம் நீண்ட காலம் வாழ முடியாது. மோடி அரசு ஜனநாயக எதிர்காலத்தை அச்சுறுத்துகிறது.” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “மிகப் பெரிய இன அழிப்புக்கு இந்தியா தயாராகிறது” : பிரபல ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்!