India

வரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.53 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது தொடங்கி, இந்திய பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோல், இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் இருக்கின்றன.

இந்நிலையில், கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால் பொருளாதாரம் மீண்டு எழும், நிச்சயம் பா.ஜ.க ஆட்சியில் 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக உயரும் என வழக்கம்போல தங்கள் வசனத்தைப் பேச ஆரம்பித்தார்கள்.

அவர்களின் பொய்ப் பிரச்சாரம் நீடிக்காத வகையில், இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று வரலாறு காணாத சரிவு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 5.53 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.

நேற்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடனேயே துவங்கின. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,448.37 புள்ளிகள் சரிந்து 38,297.29 ஆக இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 414.10 புள்ளிகள் சரிந்து 11,219.20 ஆனது.

இதனால், நேற்று ஒரே நாளில் மட்டும் பங்குகளின் மதிப்பு 5,53.013.66 கோடி சரிந்து 1,46,87,010.42 ஆக ஆனது. மும்பை பங்குச்சந்தை இதற்கு முன்பு 2015 ஆகஸ்ட் 24ம் தேதி 1,624 புள்ளிகள் சரிந்ததே அதிகபட்ச சரிவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “திணறிவரும் இந்திய பொருளாதாரம் : 3வது காலாண்டிலும் ஜி.டி.பி 4.7% தான்” : மோடி ஆட்சியால் மக்கள் வேதனை!

அதுமட்டுமின்றி கடந்த 6 நாட்களாகவே தொடர்ந்து பங்குச்சந்தை அதிகச் சரிவை சந்தித்து வருகிறது. தொடர்ந்து 6 வர்த்தக நாட்களில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 2,872 புள்ளிகள் சரிந்துள்ளது. இந்த வாரம் மட்டும் நேற்று வரை பங்குச்சந்தைகளில் 11,63,709.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: பட்ஜெட் தாக்கலாகும்போதே சரிந்த பங்குச்சந்தை : மீள்வது சாத்தியமா? - நிபுணர்கள் சொல்லும் காரணம்!