India
“CAA போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு; போலிஸாருக்கு எதிராக வழக்கு” : போராட்டக்காரர்கள் துணிச்சல் நடவடிக்கை!
பா.ஜ.க அரசு இயற்றியுள்ள குடியுரிமை திருத்தம் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகள் என பலர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அடக்குமுறைகளையும் மோடி அரசு கையாண்டு வருகிறது. குறிப்பாக, போராடும் மக்களை ஒடுக்குவதற்கு அரசு, போலிஸாருக்கு தடியடி நடத்தவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் அனுமதி வழங்கியது.
அதன் விளைவாக, உத்தர பிரதேசம், கர்நாடகாவில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த போராட்டத்தில் போலிஸார் நடத்திய தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், கடந்த டிசம்பர் 20ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், தடையை மீறி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலிஸார் கற்களை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
போலிஸாரின் இத்தகைய அடக்குமுறை ஒருகட்டத்தில் கலவரமாக மூண்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பலியாகினர். அதைத்தொடர்ந்து மீரட், கான்பூர், பிஜ்னோர், லக்னோ, பிரோசாபாத் மற்றும் பிற இடங்களில் நடந்த போராட்டம் மற்றும் வன்முறையால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல் போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆளும் பா.ஜ.க அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியான 5 பேர் குடும்பத்தினர் தரப்பில், 28 போலிஸார் மற்றும் அடையாளம் தெரியாத சில போலிஸ்காரர்கள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைச் சுட்டுக் கொன்றதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலிஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. வழக்கை ஏற்ற நீதிமன்றம் இதுகுறித்து அடுத்தக்கட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போராட்டத்தை வன்முறையாக்கி மக்களை கொன்ற அதிகாரிகள் மீது பாதிக்கப்பட்டோர் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவத்திற்கு சமூக செயல்பாட்டாளர்கள் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதேபோல் நாடுமுழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில் புகார் கொடுக்க முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!