India

“லாபகரமான LIC நிறுவனத்தை தனியாருக்கு கூறுபோடுவதா?” : நாடுமுழுவதும் ஊழியர்கள் ஆவேச போராட்டம்!

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி ஊழியர்கள் மட்டுமல்ல எல்.ஐ.சி முகவர்கள், எல்.ஐ.சி-யில் காப்பீடு எடுத்துள்ள நுகர்வோர் என பலர் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்மண்டல தலைமை அலுவலகத்தில் அனைத்து சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஊழியர்களும் கலந்துக்கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட தென் மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகி கூறுகையில், “எல்.ஐ.சி 1956ல் தொடங்கப்பட்ட போது 5 கோடி ரூபாய் மூலதனத்துடன் இருந்தது. ஆனால் தற்போது 32 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புக்களைக் கொண்டு நஷ்டம் அடையாமல் இயங்கிவருகிறது.

ஏன் கடந்தாண்டு மத்திய அரசுக்கே 2 ஆயிரத்து 611 கோடி ரூபாயை ஈவுத் தொகையாக எல்.ஐ.சி தான் வழங்கியது. குறிப்பாக ஜி.எஸ்.டி வசூல், மறைமுக வரிவசூல் போன்றவற்றில் நிர்ணயித்த இலக்கை மத்திய அரசு எட்ட முடியாத நிலையில், அரசு நிர்ணயிக்கும் இலக்கையும் தாண்டி அனைத்து சேவைகளையும் எல்.ஐ.சி வழங்கி வருகிறது. அத்தகைய நிறுவனத்தை தனியாருக்கு கொடுப்பது ஏன்?

அதுமட்டுமின்றி, அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி, ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி போன்ற நிறுவனங்கள் 10 ஆண்டுகள் கூட இந்தியாவில் நிலைக்க முடியாத நிலையில், 63 வருடங்களாக தேச வளர்ச்சிக்கு எல்.ஐ.சி சேவையாற்றுகிறது. இந்நிலையில் லாபகரமான எல்.ஐ.சி நிறுவனத்தை தனியாருக்கு கூறுபோடுவதா?” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Also Read: LIC பங்கை தனியாருக்கு விற்பதா? என்ன நியாயம் இது? - பொங்கும் தென் மண்டல ஊழியர் சங்கம்: ஸ்ட்ரைக் அறிவிப்பு!