India

RTI திருத்தச் சட்ட விவகாரத்தில் சபாநாயகர்களுக்கு மோடி அரசு கடிதம் எழுதியது அம்பலம்!

மத்தியில் இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சியமைத்ததில் இருந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான நிலைப்பாட்டில் உள்ள சட்டங்களை இயற்றியும், திருத்தத்தை மேற்கொண்டும் வருகிறது. அதற்கு உதாரணமாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, புதிய மோட்டார் வாகன சட்டம் என எண்ணிக்கொண்டே போகலாம்.

அந்த வகையில், தகவல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை சீர்குலைக்கும் வகையில், திருத்தம் மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்ட மசோதா கடந்த ஜூலை மாதம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது.

இந்நிலையில், இந்தச் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு பரிந்துரைக்கக் கூடாது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோருக்கு மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், அப்போதே கடிதம் எழுதியிருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் என்பவர் ஆர்.டி.ஐ. மூலம் கேட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில் இதுகுறித்து தெரியவந்துள்ளது. மத்திய பா.ஜ.க அரசு அவசர கதியில் சட்டங்களை நிறைவேற்றுவதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுவுக்கு அனுப்பி விவாதிக்கப்பட்ட பிறகு நிறைவேற்றுவது தான் பாரம்பரியம் என்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: மோடியின் 5 வருட ஆட்சியில் 3,400 வங்கிக் கிளைகள் மூடல் : ஆர்.டி.ஐ-யில் வெளியான அதிர்ச்சி தகவல்!